இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது!

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து அந்நாட்டு தேர்தல் ஆணைய விசாரணை குழு உத்தரவிட்டு உள்ளது.

பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார். இதற்கிடையே ஆளும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேரணி ஒன்றில் கலந்து கொண்ட இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது. இதனால் இம்ரான் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இது தொடர்பாக நான்கு பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தின் விசாரணை குழு இம்ரான் கான் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான் கானிடம் விளக்கம் கேட்டு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. பதில் இல்லாததை அடுத்து, இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி மூத்தத் தலைவர்களுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணை வரும் 17 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.