தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு தன்னார்வலர்களைப் பாராட்டிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என பேசினார்.

ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்படும் நிலையில், தமிழ்நாடு குறித்தான அவரது பேசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், தமிழ்நாட்டை தமிழகம் என ஆளுநர் ரவி குறிப்பிட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த ‘காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு மாத காசி -தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது. அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை கொள்வதோ மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய கவர்னர் ரவி, இன்று காலை மீண்டும் டெல்லி கிளம்பி சென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அமித்ஷாவுடன், ரவி ஆலோசனை நடத்துவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.