நீட் தேர்வு வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ல் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஜன.3-ல் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணையை 4 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீட் தொடர்பான வழக்கை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எம்.பி. இளங்கோ மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழ்நாடு அரசின் சார்பாக எடுத்துரைக்க வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.