இந்தியா சீனா இடையே நேட்டோ படைகள் பிரச்சனைகளை உருவாக்குகிறது: ரஷ்யா

இந்தியா சீனா இடையே பிரச்சனைகளை உருவாக்கும் நேட்டோ, சீன பிரச்சனையில் இந்தியாவை தூண்டி விடுவதாக ரஷ்யா அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார்.

நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும். ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

1955இல் நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது. வார்சா ஒப்பந்தத்தின்படி இணைந்த நேச நாடுகளில் பல 1991இல் சோவித் யூனியன் பிளவுபட்ட பிறகு ஒப்பந்தத்தில் இருந்து விலகி நேட்டோவில் உறுப்பினர்களாயின. இப்போது நேட்டோ அமைப்பில் 30 உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்க தலைமையிலான மேற்கு உலக நாடுகளின் ராணுவக் கூட்டணியே இந்த நேட்டோ படை.
இது மேற்கத்திய நாட்டு எல்லைகளுக்கு வெளியே அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முதல் அமைதிப்படையாக கருதப்படுகிறது. ஆனால் பல்வேறு வெளிநாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தூண்டுதலின் படி நேட்டோ படையினர் மூக்கை நுழைப்பது வாடிக்கையாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்தநிலையில் உக்ரைன் நேட்டோ படையில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புதல் அளித்த பின்னர், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இந்த போர் நீண்டு வருகிறது. இந்த போர் நீள முக்கிய காரணமாக கருதப்படுவது அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களே என கருதப்படுகிறது. அதிபர் விளாடிமிர் புதினை பொறுத்த வரை உக்ரைன் இந்த நேட்டோ படையில் இணைவது ரஷ்யாவின் வாழ்வா சாவா என்பது தொடர்பான அச்சுறுத்தலாக உள்ளது.

மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தலையிட்டு வருகின்றன என குற்றம்சாட்டப்படும் சூழலில், இந்தியா சீனா இடையே கூடுதல் பிரச்சனைகளை நேட்டோ படைகள் உருவாக்குவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறும்போது, ‘‘அமெரிக்கா தலைமையிலான ராணுவக் குழுவான நேட்டோ, சீனாவுடனான இந்தியாவின் ஏற்கனவே விரிசல் அடைந்துள்ள உறவுகளில் கூடுதல் பிரச்சனைகளை உருவாக்குவதற்காக, இந்தியாவிற்கு அதிகாரம் செய்ய முயற்சி செய்கிறது. ஜூன் 2022 இல், நேட்டோவின் மாட்ரிட் உச்சிமாநாடு, இராணுவ முகாமுக்கு உலகளாவிய அர்ப்பணிப்பு இருப்பதாக அறிவித்தது. குறிப்பாக ஆசிய-பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, அவர்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்று அழைக்கிறார்கள். சீனாவுடனான அதன் உறவுகளில் கூடுதல் சிக்கல்களை உருவாக்குவதற்காக, அவர்கள் இந்தியாவை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த பிரச்சனைகளில் இந்தியாவை நேட்டோ படைகள் தூண்டிவிடுகின்றன’’ என அவர் தெரிவித்துள்ளார்.