தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என யாரும் சொல்லவில்லை: கனிமொழி!

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என இந்த தேர்தலில் யாரும் சொல்லவில்லை எனவும், மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் தர்மதுரை திரைப்பட புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி என்பது நிச்சயமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தான் உறுதியான ஒன்று. அதிமுக என்பது பல திசைகளில் பிரிந்து கிடக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் அதில் நிறைய பேர் ஆதாயம் தேட வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக அதிமுகவில் எல்லோரும் இடைத்தேர்தலில் இணைந்து வேலை செய்தாலும் வேலை செய்யாவிட்டாலும் இடைத்தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும். தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என இந்த தேர்தலில் யாரும் சொல்லவில்லை. மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பது தான் திமுகவின் வாக்குறுதி. இவ்வாறு கனிமொழி கூறினார்.