சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் பைடன் பாராட்டு!

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்கு அதிபர் பைடன் தனது பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும்படியாக பறந்து சென்றது. அது சீனாவை சேர்ந்த உளவு பலூன் என அமெரிக்கா கூறியது. உடனடியாக அந்த மர்ம பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணுசக்தி ஏவுதளம் மீது பறக்கும்போது பலூனை சுட்டு வீழ்த்தினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிரவும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதற்காக அந்த முயற்சியை கைவிட்டு விட்டோம் என அமெரிக்க ராணுவம் கூறியது. அதன் இயக்கம் சார்ந்த தொடர் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. இதனை அடுத்து, அட்லாண்டிக் பெருங்கடலில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதிபர் பைடன், கடந்த புதன்கிழமை பலூன் (சீனாவின் கண்காணிப்பு பலூன்) பற்றி என்னிடம் விவரங்களை கூறினார்கள். அதனை முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுட்டு தள்ளும்படி பென்டகனுக்கு உத்தரவிட்டேன். அவர்கள் அதனை சுட்டு வீழ்த்தி விட்டனர். நிலப்பகுதியில் வசிக்கும் யாருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். எங்கள் நாட்டில் இருந்து 12 மைல் எல்லைக்குள், நீரின் மேற்பரப்பில் வந்தபோது, சிறந்த தருணத்தில் அதனை வீழ்த்த முடிவு செய்தனர். அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அதற்காக, இதனை செய்து முடித்த விமானிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.

இதுபற்றி சீன வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், அது குடிமக்கள் பயன்பாட்டிற்காக சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட விண் ஓடம் ஆகும். வானிலை ஆய்வு பணியில் ஈடுபட்ட நிலையில், திசைமாறி அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்து உள்ளது. இதற்காக எங்களது தரப்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, எதிர்பாராது நடந்த இந்த சூழலை பற்றி விளக்குவோம் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தையடுத்து, சீனா செல்ல இருந்த பயணத்தை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ரத்து செய்தார் ஆண்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனா செல்ல திட்டமிட்டிருந்தார். இருநாடுகளின் உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்ட பிறகு அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை என்பதால் ஆண்டனி பிளிங்கனின் சீன பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சீனாவோ அது உளவு பலூன் அல்ல வானிலை ஆய்வுக்காக தாங்கள் அனுப்பிய விண் ஓடம் என்றும், தவறுதலாக திசை மாறி அமெரிக்க வான்வழிக்குள் வந்துவிட்டது என்றும் விளக்கம் அளித்தது. அதோடு இந்த விவகாரத்தை அமைதியாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும் எனவும் அமெரிக்காவை சீனா வலியுறுத்தியுள்ளது. ஆனால் சீனாவின் இந்த விளக்கத்தை ஏற்பதாக இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தையடுத்து, சீனா செல்ல இருந்த பயணத்தை வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ரத்து செய்தார். மேலும் இந்த விவகாரத்தில் அவர் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுப்பற்றி அவர் கூறுகையில், “அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது” என்றார்.