நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல: ஜி.கே.வாசன்

மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு, மழையால் பாதிக்கப்பட்டு உள்ள பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது போதுமானது அல்ல. குறிப்பாக, டெல்டா மாவட்டப் பகுதிகளில் சேதமான நெற்பயிர்களுக்கும், உளுந்துக்கும் அறிவித்துள்ள நிவாரணம் விவசாயிகளின் முதலீட்டையும், செலவையும் ஈடுகட்டும் விதமாக அமையவில்லை. அதாவது விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து நடவு நட்டு, உரம் போட்டு, பாதுகாத்து பயிர் செய்தார்கள். இந்த நிலையில் பயிரிட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் தருவாயில் மழையினால் சேதமுற்றது. கடந்த 4 மாத காலமாக நெற்பயிர் விளைச்சலுக்கு நடவு முதல் அறுவடை வரை உழைப்பை மேற்கொண்ட விவசாயிகளின் உழைப்பும் வீணாகி விட்டது. செலவு, உழைப்பு இவற்றை கவனத்தில் கொண்டால் நெற்பயிர்களின் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கினால் தான் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஓரளவுக்கு நஷ்டத்தில் இருந்து விடுபடுவார்கள்.

எனவே தமிழ்நாடு அரசு, மழையினால் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக குறைந்த பட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.