துருக்கி, சிரியாவில் பலி 30 ஆயிரத்தை தாண்டும் அபாயம்: உலக சுகாதார நிறுவனம்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நடக்கும் மீட்புப் பணியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து கொத்து, கொத்தாக சடலங்கள் மீட்கப்படுகின்றன. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

துருக்கியின் காஜியான்தெப் நகரின் அருகே நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில், 7.8 ரிக்டர் அளவில் பயங்கர சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் காஜியான்தெப், ஹடாய், கஹ்ராமன்மராஸ், தியர்பாகிர் உள்ளிட்ட 10 மாகாணங்களிலும், அண்டை நாடான சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள அலெப்போ மற்றும் ஹமா நகரங்களிலும் சுமார் 330 கிமீ சுற்றளவுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பல கட்டிடங்கள் மண்ணில் புதைந்து மக்கள் பலரும் பலியாகினர். நேற்று முன்தினம் வரை பலி எண்ணிக்கை 2,300 ஆக இருந்தது.

இந்நிலையில், துருக்கி, சிரியாவில் இரவு பகலாக மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. துருக்கியில் 24,400 பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு கடுங்குளிரிலும் நடந்த மீட்புப் பணியில், கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களை விட கொத்து கொத்தாக சடலங்களே கிடைத்தன. துருக்கியில் மட்டுமே 6,000 குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்துள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நேற்று வரை சுமார் 200க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீட்புப்படையினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹடாய் போன்ற மாகாணங்களில் இடிபாடுகளில் சிக்கிய குடும்பத்தினரின் கூக்குரல் கேட்ட போதிலும் கனரக மீட்பு உபகரணங்கள் இல்லாததால் அவர்களை மீட்க முடியாமல் மக்கள் பரிதவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதுவரை துருக்கியில் 10 மாகாணங்களில் 7,800 பேர் மீட்கப்பட்டிருப்பதாக பேரிடர் மீட்பு அதிகாரி டாடர் தெரிவித்துள்ளார். ஹடாய் மற்றும் காஜியன்தெப் மாகாணங்களில் இரவு முழுக்க மக்கள் விளையாட்டு கூடங்கள், ஷாப்பிங் மால்கள், மசூதிகளில் தங்கினர். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மருத்துவ குழுவினர் இரவு பகலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். அங்குள்ள மருத்துவமனைகள் தொடர்ந்து காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.

சிரியாவில் 12 ஆண்டுகால உள்நாட்டுப் போரால் அகதிகளாக புலம்பெயர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பல வீடுகள் இடிந்து மக்கள் பலர் பலியாகி இருப்பதாகவும், உரிய மீட்புப்பணி இல்லாமல் பல உயிர்கள் காப்பாற்ற முடியாமல் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய நிலவரப்படி, துருக்கியில் 3,549 பேர் பலியாகி இருப்பதாகவும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் அதிபர் எர்டோகன் கூறி உள்ளார். சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலியானோர் எண்ணிக்கை 812 ஆக அதிகரித்துள்ளதாகவும், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 900க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இரு பகுதிகளிலும் சுமார் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். பல குழந்தைகள் பெற்றோர், குடும்பத்தினரை இழந்து அநாதைகளாகி உள்ளன.

இந்நிலையில், துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் தற்போதைய பலி எண்ணிக்கையை விட, மொத்த பலி 8 மடங்கு அதிகமாக இருக்கலாம் எனக்கூறி உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அளித்துள்ளது. வரலாறு காணாத இந்த நிலநடுக்கத்தால் மொத்த பலி எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் துருக்கி, சிரியாவில் 2.3 கோடி பேர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும், 50 லட்சம் பேர் கடுமையான பாதிப்புகளை சந்திப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகப்படியான உடனடி உதவிகள் அவசியம் என்றும் அதற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமெனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

துருக்கி, சிரியாவுக்கு மீட்புப்பணிகளில் உதவ இந்தியா 99 பேர் கொண்ட மருத்துவ குழுவையும், 101 பேரிடர் மீட்பு வீரர்களை கொண்ட 2 குழுவையும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. தேடல் மற்றும் மீட்பு பணியாளர்கள், சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய் படை, துளையிடும் இயந்திரம், நிவாரணப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுடன் புறப்பட்ட இந்திய விமானப்படையின் சி-17 விமானம் நேற்று காலை துருக்கியின் அதானாவில் தரை இறங்கியது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை நிபுணர்கள், பேரிடர் மீட்பு படையினர், நிவாரண பொருட்களுடன் 2வது விமானம் நேற்று பிற்பகலில் துருக்கிக்கு புறப்பட்டு சென்றது. இது குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில், ‘இந்த சவாலான நேரத்தில் இந்தியா தனது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது’ என்றார்.

இதே போல சிரியாவிற்கும் தனி விமானத்தில் மீட்பு மற்றும் மருத்துவ உதவிகள் அனுப்பப்பட உள்ளன. மேலும், துருக்கி, சிரியாவுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது தொடர்பாக அந்நாடுகளுக்கு விமான போக்குவரத்து வழங்கி வரும் விமான நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.

இந்தியாவின் உதவிக்கு இந்தியாவுக்கான துருக்கி தூதர் சுனல் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்’ என்றும், இந்தியிலும், துருக்கி மொழியிலும் ‘தோஸ்த்’ என்ற வார்த்தை நண்பனை குறிக்கும் ஒற்றுமையையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல, அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளும் துருக்கிக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றன.

பாகிஸ்தான் மீட்பு படையுடன் நிவாரண பொருட்களையும் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று (புதன்கிழமை) அங்காரா சென்று நேரில் அனுதாபம் தெரிவிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துருக்கி அதிபர் எர்டோகனை தொலைபேசியில் அழைத்து பேசி உதவிகள் அளிக்கப்படும் என தெரிவித்த கையோடு நிவாரண, மீட்புப்படைகளை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் இருந்து மருத்துவ குழு துருக்கி விரைகிறது. துருக்கிக்கு 65 நாடுகளில் இருந்து 2,660 பேர் மீட்பு, நிவாரண பணிகளுக்காக விரைவதாக துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரகால அமைப்பு ‘அபாட்’ தெரிவிக்கிறது. துருக்கியில் மட்டுமே சுமார் 25 ஆயிரம் அவசர கால பணியாளர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பல இடங்களில் மீட்பு, நிவாரண பணி குழுவினர் வரவில்லை என்ற தகவலும் வந்திருக்கிறது.