துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியது!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை காலையில் 7.8 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இது மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் இரவும் பகலுமாக நடைபெற்று வருகின்றன. கடுங்குளிராலும், நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாள்கள் கடந்துள்ளதாலும் இடிபாடுகளில் சிக்கியவா்கள் உயிா் பிழைப்பது கடினம் எனக் கூறப்படுகிறது.

துருக்கியில் நிலவும் ‘மைனஸ் 6’ டிகிரி செஸ்சியஸ் குளிரால் படுகாயமடைந்தவா்களும் பனியில் உறைந்து உயிரிழப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் மட்டும் இதுவரை 12,391-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சிரியாவில் 2,992 பேர் பலியாகி உள்ளதாக மீட்புப் பணியாளா்கள் தெரிவித்துள்ளனா். துருக்கியில் பெரும்பாலான பகுதிகளில் மீட்புப் பணிகள் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.

துருக்கியில் 24 நாடுகளுக்கும் மேற்பட்ட மீட்புப் படையினா் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், உள்நாட்டுப் போா் பாதிப்பில் உள்ள சிரியாவில் ஏராளமான கிராமங்கள் மீட்புப் பணிகளுக்காக காத்திருக்கின்றன.