இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று 12 ஆம் தேதி முடிவு செய்யப்படும்: டிடிவி தினகரன்

இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து 12 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தஞ்சையில் அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

தஞ்சையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5000 – 10,000 வாக்குகள் கூடுதலாக பெற முடியுமே தவிர‌ அவர்களால் வெற்றி பெற முடியாது. சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான், தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் நிர்பந்திக்கவில்லை. எம்ஜிஆரிடமும் – ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்காக இருந்தது. தற்போது அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது. பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் அதன் செல்வாக்கை இழக்கும். இடைத்தேர்தலில் திமுகவுக்கும் வாக்களிக்க மாட்டோம், அதிமுகவிற்கும் வாக்களிக்க மாட்டோம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து 12 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும்.

திமுக நிதியிலிருந்து அறிவாலயத்தில் அல்லது கலைஞரின் நினைவிடத்திலோ அவர்கள் பேனா நினைவுச் சின்னம் அமைத்துக் கொள்ளட்டும். கடலில் அமைக்கும் போதுதான் பிரச்னைகள் வருகிறது. பேனா சிலையை உடைப்பேன் என்ற நிலை வருவதற்கு அதன் தலைவர் ஸ்டாலின் தான் காரணம். இவ்வாறு தினகரன் கூறினார்.