கனடாவில் பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல்!

கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ தகவல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியது. ஆனால் சீனாவோ அது உளவு பலூன் இல்லை என்றும், வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் திசை மாறி அமெரிக்காவுக்குள் வந்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தது. ஆனால் அமெரிக்கா அதை ஏற்கவில்லை. இதனையடுத்து, ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் கடந்த 4-ந் தேதி சீன உளவு பலூன் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பலூன் விவகாரத்தில் அரசியல் ரீதியில் தங்களை தவறாக சித்தரிக்கும் செயல் என்று குற்றம் சாட்டியது. இப்படி உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், அமெரிக்க வான் பரப்பில் மீண்டும் ஒரு மர்ம பொருள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் அந்த மர்ம பொருள் பறந்ததாகவும், அதை போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்தநிலையில், “அடையாளம் தெரியாத மர்ம பொருள்” கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனடா வான்வளியில் பறந்த அந்த மர்ம பொருள் அமெரிக்க மற்றும் கனடா ராணுவங்கள் இணைந்து சுட்டு வீழ்த்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவின்படி கனடா – அமெரிக்கா ராணுவங்கள் இணைந்து இந்த பணிகளைச் செய்துள்ளன. அதேநேரம் இது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கீழே விழுந்து கிடக்கும் மர்மப் பொருளின் பாகங்கள் சேகரிக்கும் நடவடிக்கையை இப்போது இரு நாட்டு ராணுவமும் தொடங்கியுள்ளது. இந்த பொருட்களை வைத்து ஆய்வு செய்யவும் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இரண்டு நாட்களில் இரண்டு மர்ம பொருட்களை அமெரிக்கா ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.