என் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?: சீமான்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலில் நேரில் வரட்டும்.. அதன்பின்னர் பேசுவோம்.. அதுவரை குழப்பாமல் இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய தகவல் பற்றி சீமான் கூறியதாவது:-

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு என்னிடம் பதில்கள் இல்லை. ஆனால் சில கேள்விகள் மட்டும் இருக்கின்றன. என் தம்பி பாலச்சந்திரனை பலி கொடுத்துவிட்டு பிரபாகரன் மட்டுமே தப்பி சென்றிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா? பிரபாகரன், எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த மண்ணைவிட்டு நாட்டைவிட்டு போகமாட்டேன் என இறுதிவரை நின்று யுத்தம் புரிந்தவர். அப்படிப்பட்டவர் தம்முடைய உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு தப்பி செல்லக் கூடிய கோழையா அவர்? யுத்தம் செய்து மிகப் பெரிய பேரழிவை எதிர்கொண்டிருக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் 14 ஆண்டுகள் எதுவுமே பேசாமல் ஒரு இடத்தில் பதுங்கியே இருக்கக் கூடியவரா பிரபாகரன்? அப்படியா நீங்கள் நினைக்கிறீர்கள்?

பிரபாகரன் சொல்லிவிட்டு வரக் கூடியவர் அல்ல.. வந்துவிட்டு சொல்லக் கூடியவர்தான். பிரபாகரனின் பண்பும் பழக்கமும் அதுதான். அதுவரை தேவையில்லாமல் குழப்பக் கூடாது. ஒருநாள் பிரபாகரன் தோன்றுவார் என கூறுகிறார்கள்தானே.. அவர் தோன்றும்போது தோன்றட்டும்.

பெரியாரிடம் கடவுள் இல்லை என்கிறீர்களே உங்கள் முன் கடவுள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர். அன்று முதல் கடவுள் இருக்கிறார் என சொல்வேன் என்றார். அதேபோலத்தான் பழ.நெடுமாறன் சொல்வதைப் போல பிரபாகரன் நேரில் வந்துவிட்டால் அப்போது அதைப் பற்றி பேசலாம். இவ்வாறு சீமான் கூறினார்.