விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்குவது ஏற்கத்தக்கதல்ல: மக்கள் நீதி மய்யம்!

பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஐடி சோதனைக்கு கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

‘இந்தியா மோடி மீதான கேள்வி’ என்ற ஆவணப்படத்தை பி.பி.சி. வெளியிட்டது. இதில் குஜராத் கலவரம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டிருக்கிறது. இந்த ஆவண வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், யூ டியூப் வீடியோ மற்றும் அதன் இணைப்புகளை கொண்ட டுவிட்டர் பகுதிகளை மத்திய அரசு முடக்கியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் பி.பி.சி. ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லியில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்தினர். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஐடி சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தியுள்ளனர். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், சிபிஐ, வருமான வரி, அமலாக்கத் துறைகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், விமர்சிப்பதும் ஊடகங்களின் பணி. அவற்றை ஏற்று, திருத்திக் கொள்வதுதான் மத்திய அரசுக்கு அழகு. அதைவிடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, விமர்சிப்போரின் குரல்வளையை நெறிக்க முற்படுவது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது.

எதிர்க்கட்சிகள், ஊடகங்களைப் பழிவாங்க அரசு அமைப்புகளைப் பயன்படுத்தும் சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த சோதனைக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு மக்கள் நீதிமய்யம் கூறியுள்ளது.