கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது ஒருவித கலக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு 100க்கும் குறைவாகவே இருந்து வந்தது. கடந்த சில வாரங்களில் நோய்த்தொற்றின் பாசிடிவ் விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாக காணப்படுகிறது. இதனால் 100ஐ தாண்டி பரவல் வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 172ஆக இருந்த சூழலில், நேற்று மட்டும் புதிதாக 186 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை 57, செங்கல்பட்டு 22, கன்னியாகுமரி 15, திருவள்ளூர் 10, கோவை 9 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 993ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 3,316 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 102 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
இன்றைய தினம் தூத்துக்குடியை சேர்ந்த 54 வயது நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதுகுறித்து வெளியான தகவலில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தியேட்டர், வணிக வளாகம், கடைகள் உள்ளிட்ட கூட்டம் நிறைந்த இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் தமிழகத்தில் பொதுமக்கள் அச்சப்படும் வகையில் கொரோனா பாதிப்புகள் இல்லை. எனவே பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் தேவைப்படாது. பொதுமக்கள் மிகவும் தைரியமாக இருங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
