எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு புகாருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்!

முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான காழ்ப்புணர்ச்சி அரசியலை தமிழ் மாநில காங்கிரஸ் கண்டிக்கிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மருத்துவக்கல்லூரிக்கு கட்டிடம் கட்டியதில் முறைகேடு என தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணை நடத்தக்கோரி தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது தமிழக அரசின் காழ்ப்புணர்ச்சி அரசியலை எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழக அரசுக்கு எதிர்மறை வாக்குகள் அதிகமாகியிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க மக்கள் மத்தியில் வளர்ச்சி அடைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் மீது வழக்கு தொடுத்திருப்பது, தி.மு.க ஆட்சியின் தவறுகளை திசை திருப்பவே முயற்சி செய்கிறார்கள் என்பது தெளிவாகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் மீதான காழ்ப்புணர்ச்சி அரசியலை தமிழ் மாநில காங்கிரஸ் கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.