மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்!

வருகிற 15-ந்தேதி 76 இடங்களில் மிகப்பெரிய ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். 20-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு குறித்த ‘பா.ஜனதாவின் ஜனநாயக படுகொலை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்ன தம்பி தலைமை வகித்தார்.தமிழ்நாடு பொறுப்பாளர் நா கேஷ்கரியப்பா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றம் என்பது விவாதம் செய்வதற்கான இடம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சில கேள்விகளை கேட்கிறார்கள். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது அரசுடைய கடமை. பதில் சொன்னால் தான் எதிர்க்கட்சி பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதா எதிர்க்கட்சி தன்னுடைய கடமையை செய்து விட்டதா என்கின்ற நிலைப்பாடு பொதுமக்களுக்கு தெரியும். நாங்கள் ஒன்றும் தவறாக கேட்கவில்லை. இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி என்பது வேறு, வீக்கம் என்பது வேறு. குஜராத்தில் அதானி என்ற குறிப்பிட்ட தொழில் அதிபர் வளர்வதற்கு பதில் வீங்கி கொண்டிருக்கிறார். அந்த வீக்கம் நல்லதற்குரியது அல்ல .அவ்வளவு பெரிய வளர்ச்சி அந்த நிறுவனத்திற்கு எப்படி கிடைத்தது. அதற்கு நாடாளுமன்றத்தில் சரியாக பதில் சொல்லாததால் தான் மோடிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அதற்காகத்தான் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுகிறோம். வருகிற 15-ந்தேதி 76 இடங்களில் மிகப்பெரிய ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும். 20-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இறுதியாக உண்ணாவிரதம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.