வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் ஜப்பான் மக்கள் பீதி!

வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது.

இன்று காலை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில் விழலாம் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹொக்கைடோ பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஜப்பான் அரசு வலியுறுத்தியது. மேலும் மக்கள் குடியிருப்புகளின் அடித்தளத்தில் சென்று பதுங்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டது. வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்தது.

இந்த நிலையில்தான் வடகொரியா இன்று நடத்திய சோதனை ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் விழுந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் ஹொக்கைடோ மக்களிடம் குழப்பம் நிலவியது. இதற்கிடையில் மக்களை வெளியேறக் கூறிய உத்தரவை ஜப்பான் அரசு திரும்பப்பெற்றது.

முன்னதாக கடந்த வாரம், அணு ஆயுத சோதனையை கடலுக்கு அடியில் வடகொரியா நடத்தியது. இதற்கு உலக நாடுகளிடம் கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் மீண்டும் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு ஹெய்ல் -2 என்று பெயரிடப்பட்டது. இந்த வகை ஏவுகணைகள் கடலுக்கு அடியில் செலுத்தும்போது செயற்கையான சுனாமி அலைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

அமெரிக்க – தென்கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில மாதங்களாகவே ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், இரு நாடுகளும் மிகப் பெரிய ராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான், வடகொரியா தொடர்ந்து எவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா – தென்கொரியாவின் ராணுவப் பயிற்சிக்கு எதிர்வினையாக மார்ச் மாத இறுதியில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் (செயற்கை சுனாமி) சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது வடகொரியா.