எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று புகழேந்தி மனு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை வழங்கியுள்ளார் புகழேந்தி.

ஓபிஎஸ் ஆதரவாளரும் அவரது அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான புகழேந்தி இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச் செயலாளாராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது. அதிமுக என்ற கட்சி தற்போதும் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமையின் கீழ் தான்செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்தான் உண்மையான அதிமுக. கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் கையெழுத்திடும் வேட்பாளரின் வேட்பு மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி, தன்னிடம் தான் கட்சி உள்ளது என்று கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு உடனே அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார். இந்த அழுத்தம் மூலம் தேர்தல் ஆணையத்தை தவறாக வழிநடத்த அவர் முயல்கிறார். பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமில்லாமல் அதிமுக செயற்குழு கூட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட 18 வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக முடிவெடுக்க கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும், பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்ட சில நிமிடங்களில் அதிமுக தலைமைக் கழகம் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் அது பிரதிபலிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அதில் அவர், தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.