15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நார்வே!

உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நார்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றி உள்ளது.

ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் தங்களது நாட்டில் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின. மேலும் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவும் மறுக்கப்பட்டது. இதேபோல் தற்போது ரஷ்யாவின் அண்டை நாடான நார்வேயிலும் அரங்கேறி உள்ளது. அதாவது நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் ரஷ்ய தூதரகம் செயல்படுகிறது. அங்கு பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக நார்வே கருதியது. எனவே அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையிலும் அவர்களது செயல்பாடுகள் ராஜதந்திர நடவடிக்கைகளுடன் பொருந்தவில்லை என நார்வே முடிவு செய்தது. இதனையடுத்து நார்வேயில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 15 பேரை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை நார்வே அரசாங்கம் வெளியிட்டது. இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அன்னிகென் ஹூய்ட்பெல்ட் கூறுகையில், `ரஷ்யாவின் உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை எதிர்ப்பதற்கும், அதன் மூலம் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்’ என தெரிவித்தார். கடந்த ஆண்டிலும் இதுபோல 3 தூதரக அதிகாரிகளை நார்வே வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.