திமுகவினரை பொறுத்தவரை மடியில் கனம் இல்லை.. வழியில் பயம் இல்லை: மா. சுப்பிரமணியன்

திமுகவினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

திமுகவின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவேன் என பல மாதங்களுக்கு முன்பே கூறி புயலை கிளப்பினார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் இதுதொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சில முக்கிய அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இன்றைக்கு அண்ணாமலை செய்யும் செயலால் ஒட்டுமொத்த நாடே அதிரப்போகிறது என்ற ரேஞ்சுக்கு பாஜகவினர் பில்டப் கொடுத்த நிலையில், அவரது இந்த செயல் பலரையும் ஏமாற்றம் அடையச் செய்ததாக கூறப்படுகிறது. இதை வைத்து சமூக வலைதளங்களில் அண்ணாமலையை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் நிருபர் ஒருவர், “திமுகவினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார்.. ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி திமுகவினரால் பதுக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை கூறியிருக்கிறார்.. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..” என கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், “அண்ணாமலை தொடர்ச்சியாக செய்து வரும் விஷயங்கள் நம் அனைவருக்குமே தெரியும். அவர் கூறியபடி, திமுகவினர் ஏதேனும் தவறு செய்திருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.. அனைத்து துறைகளும் மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது. அவர்களிடம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டியதுதானே.. திமுகவினரை பொறுத்தவரை மடியில் கனம் இல்லை.. வழியில் பயம் இல்லை.. என்கிற மனநிலையில்தான் இருக்கிறார்கள்” என்றார்.