ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

ஜப்பான் பிரதமர் ஃபுமியா கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் சக்திவாய்ந்த குண்டு வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

ஜப்பான் நாட்டில் பிரதமராக பதவி வகிப்பவர் ஃபுமியோ கிஷிடா. அந்நாட்டில் நீண்டகாலமாக பிரதமராக இருந்த ஷின்சோ அபே தனது பதவியை கடந்த 2020-ம் ஆண்டு ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலுக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, முன்னாள் கடற்படை வீரர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஷின்சோ அபே உயிரிழந்தார். இச்சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவரது கொலையில் உலக வல்லரசு நாடு ஒன்றுக்கு தொடர்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி ஓய்வதற்குள்ளாக, மீண்டும் ஒரு பயங்கர நிகழ்வு அங்கு அரங்கேறியுள்ளது. ஜப்பான் நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வகயாமா நகரில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி வந்த மர்மநபர் ஒருவர், பிரதமரை நோக்கி பைப் வெடிகுண்டை வீசினார். இதை யாரும் கவனிக்கவில்லை. முதலில், அந்த வெடிகுண்டில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது. கரும்புகையை பார்த்ததுமே, ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த பாதுகாப்புப் படையினர் பிரதமரை மேடையில் இருந்து அப்புறப்படுத்தினர். பிரதமர் அங்கிருந்து இறங்கிய அடுத்த நொடி, அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பிரதமர் ஃபுமியோ கிஷிடா உயிர் தப்பினார். மேடை அருகே இருந்த பொதுமக்கள் சிலர் குண்டுவெடிப்பில் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குண்டு வீசிய நபரை அங்கிருந்த மக்களும், போலீஸாரும் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரமதர் பங்கற்ற நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் ஜப்பான் மட்டுமின்றி ஆசிய நாடுகள் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.