கெஜ்ரிவாலுக்கான சிபிஐ சம்மன் நிச்சயமாக துன்புறுத்தல்தான்: கபில் சிபல்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பியிருப்பது குறித்து, ‘நிச்சயமாக இது துன்புறுத்தல் தான்’ என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லியின் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.16) காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ” கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. பாஜக சொல்கிறது: சட்டம் இருக்கிறது; என்னுடைய நிலைப்பாடு: துன்புறுத்தல் நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் டெல்லியில் கூறியதாவது:-

டெல்லி சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், அதானி குழுமத்தின் கறுப்பு பணம், பிரதமர் நரேந்திர மோடியுடையது என்று குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து கேஜ்ரிவாலை சிறையில் அடைக்க சதி நடக்கிறது. இதன்படியே சிபிஐ தரப்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஊழலை மறைக்க, பாஜக எந்த எல்லைக்கும் செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

சம்மன் குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறும்போது, “டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மற்றும் சில சாட்சிகள் முதல்வர் கேஜ்ரிவால் பெயரைக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பி உள்ளோம்’’ என்று தெரிவித்தன.