பாகிஸ்தானில் மழையின்போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 8 சிறுவர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பெருமழையின்போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வடக்கு பாகிஸ்தானில் சாங்காலா மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. மாலை நேரத்தில் 12 முதல் 15 வயது வரை நிரம்பிய 15 சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது பலத்த மழை கொட்டி தீர்த்தது. அப்போது வெள்ளம் பெருக்கெடுத்து திடீரென்று நிலச்சரிவு உண்டாகி சிறுவர்கள் நின்றிருந்த இடத்தை மூழ்கடித்தது. தகவலறிந்து வந்த மீட்பு படையுடன் இணைந்து பொதுமக்களும் சிறார்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களுடன் ராணுவத்தினரும் இணைந்து மண்ணில் புதையுண்ட 8 உடல்களை கண்டெடுத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.