பாரத் என பெயர் மாற்ற ரூ 14 ஆயிரம் கோடி ஆகும்: மதுரை எம்பி சு.வெங்கடேசன்!

பாரத் என பெயர் மாற்ற ரூ 14 ஆயிரம் கோடி ஆகும். இந்த தொகையானது தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு காலை உணவு திட்டத்திற்கு மேற்கொள்ளும் செலவிற்கு சமம் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசியல் சாசனத்தின் முதல் வரியான “இந்தியாவின் மக்களாகிய நாங்கள்” ( We, the people of India) மீதே பா.ஜ.கவின் தாக்குதல். இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகக் கூடிய ரூ 14000 கோடி, தமிழ்நாட்டின் 17 லட்சம் 1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம். இவ்வாறு சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாரத் என பெயர் மாற்ற உத்தேசமாக ஆகும் செலவு குறித்து ஒரு விளக்கப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் 2023 நிதியாண்டில் இந்தியாவின் வருமானம் ரூ 23.84 லட்சம் கோடியாகும். இந்த தொகையுடன் மார்கெட்டிங் பட்ஜெட் 0.06 என்பதை பெருக்கினால் ரூ 14,304 கோடி வருகிறது என குறிப்பிட்டுள்ளார். இது டெரன் ஆலிவர் பார்முலா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.