உதயநிதி ஸ்டாலினை ‘இளம் பெரியார்’ என்று சொல்லலாம்: கே.எஸ்.அழகிரி

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சொன்னதைத் தான் சொல்லி உள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலினை ‘இளம் பெரியார்’ என்று சொல்லலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திருநெல்வேலியில் கூறியதாவது:

சனாதனம் குறித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால் தெளிவான பதிலை கொடுத்துள்ளார். அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. உதயநிதி ஸ்டாலின் புதிதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சொன்னதைத் தான் சொல்லி உள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலினை ‘இளம் பெரியார்’ என்று சொல்லலாம்.

உத்தர பிரதேச சாமியார் கூறிய கருத்து சனாதனத்தின் கொடூரத்தை காட்டுகிறது. கருத்து சொன்னாலே தலை போய் விடும் என்றால், தேசத்தில் ஜனநாயகம் எங்கு உள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி ஸ்டாலின் கருத்தை கேட்டு இந்து அறநிலையத் துறையை மூட நம்பிக்கை இல்லாத துறையாக அமைச்சர் சேகர் பாபு மாற்ற வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது தவறு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.