திமுகவுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்கு பெண்கள் சொற்ப காசையும் இழக்கணுமா?: சசிகலா

தமிழ்நாட்டில்‌ பல இடங்களில் சரியான விதிமுறைகளைப் பின்பற்றாமல் அமைக்கப்படும் வேகத்தடைகளால் விபத்துகள் ஏற்படுவதாக விமர்சித்து சாலை விதிகளை முறையாக வரன்முறைப்படுத்த தவறிய திமுக அரசுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில்‌ உள்ள மாநில நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ மாவட்ட, ஊரக பகுதிகளில்‌ உள்ள நெடுஞ்சாலைகளில்‌ அனுமதியின்றியும்‌, சரியான விதிமுறைகளை பின்பற்றாமலும்‌ வைக்கப்படுகின்ற வேகத்தடைகளால்‌ அன்றாடம்‌ நிகழும்‌ சாலை விபத்துகளில்‌ விலைமதிப்பற்ற உயிரிழப்புகள்‌ ஏற்படுவதும்‌ மற்றும்‌ பல்வேறு கடுமையான துன்பங்களுக்கு சாமானிய மக்கள்‌ ஆளாகி வருவது மிகவும்‌ வேதனை அளிக்கிறது. அதாவது, சாலை விபத்துகளை குறைப்பதற்கு வேகத்தடைகள்‌ இன்றியமையாததாக இருந்தாலும்‌, அதுவே மிகப்பெரிய அளவில்‌ சாலை விபத்துகள்‌ ஏற்பட காரணமாகவும்‌ அமைந்துவிடுகிறது. எனவே அத்தியாவசியமான இடங்களில்‌ வேகத்தடைகள்‌ அமைக்கும்போது முறையாக அனுமதி பெற்று, உரிய வழிமுறைகளை கடைபிடித்து வைப்பது மிகவும்‌ அவயமானதாகும்‌.

சாலைகளில்‌ வேகத்தடைகள்‌ அமைக்கும்போது கடைபிடிக்கவேண்டிய வரைமுறைகளை “இந்திய சாலைகள்‌ காங்கிரஸ்‌ அமைப்பு” உருவாக்கியுள்ளது. இந்த வரைமுறைகளின்படியே வேகத்தடைகள்‌ அமைக்கப்பட வேண்டும்‌. விபத்து ஏற்படும்‌ வாய்ப்பு, வாகனங்களின்‌ பாதுகாப்பு ஆகியவற்றை மனதில்‌ கொண்டே இந்த வரைமுறைகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால்‌, இந்த வரைமுறைகள்‌ தமிழகத்தில்‌ உள்ள பெரும்பாலான இடங்களில்‌ பின்பற்றப்படவில்லை என்பது மிகவும்‌ கவலையளிக்கிறது. ஆனால்‌, திமுக தலைமையிலான அரசோ இதைப்பற்றியெல்லாம்‌ கண்டு கொள்வதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. மேலும்‌, சாலை விதிகளின்படி வேகத்தடைகள்‌ அமைக்கும்போது அவை 10 செ.மீ. உயரம்‌ கொண்டதாகவும்‌, 3.7 மீ அகலம்‌ கொண்டதாகவும்‌ இருக்க வேண்டும்‌. இந்த வேகத்தடைகள்‌ மீது பிரதபலிக்கக்கூடிய வகையில்‌ வண்ணம்‌ பூசப்பட்டு இருக்க வேண்டும்‌. வேகத்தடைகள்‌ இருப்பதை வாகன ஓட்டிகள்‌ உணரும்‌ வகையில்‌, வேகத்தடைகள்‌ இருக்கும்‌ இடத்தில்‌ இருந்து சுமார்‌ 40 மீ தூரத்தில்‌ ஒளிரும்‌ வகையில்‌ வண்ணம்‌ அடிக்கப்பட்டிருக்க வேண்டும்‌. ஆனால்‌, தமிழகத்தில்‌ உள்ள மாநில நெடுஞ்சாலைகள்‌, மாவட்ட மற்றும்‌ உள்ளாட்சி சாலைகளில்‌ போடப்படுகின்ற பெரும்பாலான வேகத்தடைகள்‌ வரைமுறைக்கு மாறாக அமைக்கப்படுவதாக குற்றசாட்டுகள்‌ எழுகின்றன.

இப்போது அமைக்கப்படும்‌ வேகத்தடைகள்‌ தாறுமாறான வடிவில்‌ அமைக்கப்படுவதாலும்‌, விதிமுறைகளுக்கு மாறாக அதிக உயரம்‌ கொண்ட வேகத்தடைகள்‌ அமைக்கப்படுவதாலும்‌ இதன்‌ வழியாக பயணிக்கும்‌ இருசக்கர வாகன ஓட்டிகளின்‌ பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இப்போது உள்ள வேகத்தடைகள்‌ விபத்தை ஏற்படுத்தும்‌ வகையில்‌ ஆபத்தான நிலையில்‌ உள்ளன. மேலும்‌, வேகத்தடைகளில்‌ வெள்ளை நிற பட்டைகளும்‌, சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள்‌ அமைக்கப்படாமல்‌ உள்ள இடங்களில்‌ வேகத்தடையும்‌, சாலையும்‌ ஒரே மாதிரியாக இருப்பதால்‌ அந்த வழியாக செல்லும்‌ வாகன ஓட்டிகள்‌ விபத்தில்‌ சிக்கி படுகாயம்‌ அடைந்து விடுகின்றனர்‌. அதேபோன்று, வயதானவர்கள்‌, உடல்நிலை சரியில்லாதவர்கள்‌ கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்‌. அதிலும்‌, குறிப்பாக கர்ப்பிணி பெண்கள்‌ இதுபோன்ற வேகத்தடைகளை கடக்கும்போது அவர்களின்‌ கருவே கலைந்து போகின்ற அவல நிலை ஏற்படுகிறது. மேலும்‌, எத்தனையோ வாகன ஓட்டிகளின்‌ முதுகு தண்டுவடம்‌ பாதப்புக்குள்ளாக படுத்த படுக்கையாக விடுகின்றனர்‌. இவற்றையெல்லாம்‌ கண்காணித்து சரி செய்ய வேண்டிய அரசோ எதைப்பற்றியும்‌ கண்டுகொள்ளாமல்‌ இருக்கிறது.

ஆனால்‌ அதற்கு மாற்றாக சாலை விதிகளை மீறியதற்கு அபராதம்‌ என்ற பெயரில்‌ சாமானிய மக்களிடம்‌ மிகப்பெரிய வழிப்பறியை அரங்கேற்றிக்கொண்டு இருக்கும்‌ திமுக தலைமையிலான அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. அதிலும்‌ குறிப்பாக கல்லூரி மாணவர்கள்‌, மாணவிகள்‌ போன்ற இளம்‌ வயதினரை குறிவைத்து அவர்கள்‌ கையில்‌ வைத்து இருக்கும்‌ பாக்கெட்‌ மணியையும்‌ பறித்து விடுகின்றனர்‌. சாலை விதிகளை மீறுபவர்களை திருத்துவதற்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாமல்‌, அவர்கள்‌ அன்றைய சாப்பாடு செலவிற்காக கையில்‌ வைத்து இருக்கும்‌ சொற்ப பணத்தையும்‌ பறிப்பது எந்த விதத்தில்‌ நியாயம்‌? என்று தெரியவில்லை. அதேபோன்று வீட்டு பணிகளை முடித்துக்கொண்டு அவசரகதியில்‌ தங்கள்‌ இருசக்கர வாகனங்களில்‌ வேலைக்கு செல்லும்‌ பெண்கள்‌, தங்கள்‌ பிள்ளைகள்‌ பள்ளிக்கு சென்று வர வாகனங்களில்‌ கூட்டி செல்லும்‌ பெணகள்‌, என்றைக்காவது சாலை விதிகளை கடைபிடிக்க தவறும்‌ பட்சத்தில்‌, அவர்களை விசாரணை என்ற பெயரில்‌ வெகு நேரம்‌ காக்க வைக்கும்‌ கொடுமைகளும்‌ அரங்கேறிக்கொண்டு இருப்பது மிகவும்‌ வேதனை அளிக்கிறது. இவ்வாறு பெண்களை வெகுநேரம்‌ சாலையில்‌ நிற்க வைக்கும்போது அவர்களால்‌ முடிக்கவேண்டிய வீட்டு பணிகளையும்‌ செய்யமுடியாமல்‌ போவதாக சொல்லி மிகவும்‌ வேதனைப்படுகின்றனர்‌.

மேலும்‌, சென்னை போன்ற மாநகரங்களில்‌ சாலை விதிகளை மீறுபவர்களை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்கள்‌ வாகனத்தின்‌ எண்ணில்‌ அபராத தொகையை பதிந்து வைத்து கொள்கின்றனர்‌. இதனை அவர்களுக்கு தெரியப்படுத்துவதும்‌ இல்லை. இதன்‌ காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே அவர்கள்‌ வாகனத்திற்கு அபராதமாக 1000, 2000, 4000 ரூபாய்‌ என திமுக தலைமையிலான அரசுக்கு வாக்களித்த பாவத்திற்காக தங்கள்‌ கையில்‌ அன்றாட செலவிற்காக வைத்து இருக்கும்‌ சொற்ப பணத்தையும்‌ செலுத்தவேண்டி இருப்பதாக சொல்லி பொதுமக்கள்‌ மிகவும்‌ வேதனைப்படுகின்றனர்‌.

ஜெயலலிதா‌ ஆட்சி காலத்தில்‌ சாலை விதிகளை மீறுபவர்களை இந்த அளவுக்கு துன்புறுத்தியது. இல்லை அவர்களுக்கு தேவையான புத்திமதிகளை சொல்லி சாலை விதிகளை சரியான முறையில்‌ கடைபிடிக்க செய்தனர்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. தமிழகத்தில்‌ இன்றைக்கு பெரும்பாலான சாலைகள்‌ மிகவும்‌ குண்டும்‌ குழியுமாக மரணப்பள்ளங்களோடு காட்சியளிக்கின்றன. ஒரு நல்ல அரசாக இருந்தால்‌ மக்களுக்கு தரமான, பாதுகாப்பான சாலைகளை அமைத்து தரவேண்டும்‌. ஆனால்‌, திமுக தலைமையிலான அரசோ நாள்தோறும்‌ தமிழக மக்களுக்கு பல்வேறு துன்பங்களை மட்டும்‌ அளித்து வருகிறது. எனவே, திமுக தலைமையிலான அரசு, தமிழக மக்களுக்கு தேவையான, தரமான, பாதுகாப்பான சாலை வசதிகளை அமைத்து தரவேண்டும்‌. அதேபோன்று, சாலை விதிகளை மீறுபவர்களிடம்‌ அபராதம்‌ வசூலிப்பதற்கு பதிலாக உறிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சாலை விதிகளை கடைபிடிக்க செய்ய வேண்டும்‌. மேலும்‌, தமிழகத்தில்‌ உள்ள நெடுஞ்சாலைகளில்‌ விதிமுறைகளை மீறி போடப்பட்டுள்ள வேகத்தடைகளை உடனே சரிசெய்து தமிழக மக்கள்‌ பாதுகாப்பான வகையில்‌ வாகனங்களில்‌ பயணிக்க தேவையான வழிவகைகளை செய்து தரவேண்டும்‌ என தமிழக அரசைக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.