இந்தியாவை சிதைக்க வேண்டும் என்பதற்காகவே “இந்தியா” கூட்டணி உருவாகியுள்ளது: எச்.ராஜா

பாஜக, அதிமுக உறவு என்பது கணவன் மனைவி போன்றதுதான், அதற்காக தினமும் ஐ லவ் யூ சொல்ல முடியாது என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சனாதன தர்மம் நிலையானது. வெளிநாட்டு ஆய்வாளர் மேக்ஸ் மூல் ஆய்வில் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதுதான் சனாதனம் என்கிறார். வள்ளுவர் தனது திருக்குறளில் கூட 4 வகையான ஜாதிகளை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்தெல்லாம் வைரமுத்துவுக்கு தெரியவில்லை. அதனால்தான் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு திருவள்ளுவரை வைத்து பதில் அளித்துள்ளார். இந்தியாவை சிதைக்க வேண்டும் என்பதற்காகவே “இந்தியா” கூட்டணி உருவாக்கியுள்ளது. காங்கிரஸின் உண்மையான முகம் தற்போது தெரியவந்துள்ளது. டெங்குவை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய இந்தியாவின் 80 சதவீத பெரும்பான்மை மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்பது போல் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதிக்கு எதிராக பாஜக சார்பில் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்படும். உதயநிதி பேசியதை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்ப்போம். 13 ஆண்டுகளாக வீட்டு வாடகை கொடுக்காத சீமான் ஒரு பிராடு, இரண்டு லட்சுமிகள் புகார் கொடுத்ததுமே முழு சூரிய முகியாக மாறி திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்றார்.

பாஜக மற்றும் அதிமுக இடையிலான தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எச்.ராஜாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கணவன் மனைவிக்கு தினமும் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாஜக அதிமுக உறவு என்பது கணவன் மனைவி போன்றது என கூறியுள்ளார்.