வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தென் தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டதற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் சேவையால், நெல்லையில் இருந்து சென்னைக்கான பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைத்துள்ளது. இந்தச் சேவையை தமிழகத்தின் தென் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, நெல்லை – சென்னை எழும்பூர், விஜயவாடா – சென்னை சென்ட்ரல் உட்பட நாட்டின் 11 மாநிலங்களை இணைக்கும் வகையில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். நாட்டின் அதிவேக சொகுசு ரயிலான வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.