தமிழகம் முழுவதும் 10 பெண் ஓதுவார்கள், 3 பெண் அர்ச்சகர்கள் உள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு

தமிழகம் முழுவதும் தற்போது 10 பெண் ஓதுவார்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணை வழங்கப்பட்ட 3 பெண் அர்ச்சகர்கள், உதவி அர்ச்சகர்களாக திருக்கோயில்களில் நியமிக்கபட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கருவறைக்குள் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நுழைய முடியும் என்ற நிலையை பெரியார் மிகக் கடுமையாக எதிர்த்தார். அவர் வழிவந்த கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தை நிறைவேற்றினார். சட்டம் இயற்றினாலும் அது நிறைவேற்ற முடியாமல் போனது. அச்சட்டத்திற்கு புத்துயிர் ஊட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தை பெரியாரின் கனவையும் தந்தையின் கனவையும் ஒருசேர நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு பெண் ஓதுவார் முதன் முறையாக கோவிலில் நியமனம் செய்யப்பட்டார். இந்த ஆண்டு 3 பெண் அர்ச்சகர்கள் பயிற்சி பெற்று கோவில்களில் உதவி அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கரு சுமந்த பெண்கள் இன்றைக்கு கருவரைக்குள் சென்று மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். சிவபுராணமும் ஆண்டாள் அருளிய திருப்பாவையும் பாட ஆரம்பித்துள்ளனர். கோவில்களில் கம்பீரமாக ஒலிக்கிறது பெண் ஓதுவாரின் குரல். பெண் அர்ச்சகர்களும் அச்சரம் பிசகாமல் மந்திரங்களை கூறி பணிகளை அற்புதமாக செய்கின்றனர். இன்றைய தினம் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி நியமன ஆணை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் தான் கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். தமிழில் இறைவனை பாடி வழிபடும் நோக்கில் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டரை வருட திமுக ஆட்சியில் 34 ஓதுவார்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். மொத்தமாக 107 ஓதுவார்கள் தமிழகம் முழுவதும் பணியில் உள்ளனர்; தமிழகம் முழுவதும் தற்போது 10 பெண் ஓதுவார்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணை வழங்கப்பட்ட 3 பெண் அர்ச்சகர்கள், உதவி அர்ச்சகர்களாக திருக்கோயில்களில் நியமிக்கபட உள்ளனர்; 11 பெண் அர்ச்சகர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கூறினார்.