சீன நிலக்கரி நிறுவன கட்டிடத்தில் தீ விபத்து: 26 பேர் பலி!

சீனாவின் வடக்கு ஷாங்சி மாகாணத்தில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடம் ஒன்று இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் இன்று காலை 6.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்தில் சிக்கி 26 பேர் பலியாகியிருப்பதாகவும், 51 பேர் காயமடைந்திருப்பதாகவும், இதுவரை மொத்தம் 63 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போலீஸார் தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷாங்க்சி மாகாணம் என்பது சீனாவின் மிக அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.