உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் வாக்குகளின் அதிகாரம் வலுக்கும்: காங்கிரஸ்

தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமானது எனக் கூறி, அவற்றை ரத்து செய்திருக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, “பணத்துக்கு எதிரான வாக்குகளின் அதிகாரத்தை இது வலுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடி அரசால் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம் நாடாளுமன்ற சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பு, பணத்துக்கு எதிராக நமது வாக்குகளின் அதிகாரத்தை வலுப்படுத்தும். நீண்ட காலமாக இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டது. நமது ‘அன்னதாதா’களுக்கு (விவசாயிகளுக்கு) அநீதிக்கு மேல் அநீதி இழைக்கும் மோடி அரசு, ‘நன்கொடையாளர்’களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் விலக்குகளை அளித்து வருகிறது.

அதேபோல், விவிபாட் (VVPAT) தொடர்பாக அரசியல் கட்சிகளை சந்திக்கக் கூட தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருவதையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். வாக்களிக்கும் முறையின் அனைத்து விஷயங்களும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் ஏன் பிடிவாதமாக இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கூறுகையில், “நரேந்திர மோடியின் ஊழல் கொள்கையின் மற்றும் ஒரு ஆதாரம் உங்கள் முன் வந்துள்ளது. ஊழல் மற்றும் கமிஷன் பெறுவதற்கான ஒரு தடமாக பாஜக தேர்தல் பத்திரங்களை உருவாக்கியது. இன்று இந்த விவகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.