பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு!

பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆரிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் ஆதரவுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சர்தாரிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இம்ரான் கான் ஆதரவில் நின்ற பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சியின் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் பஷ்துன்க்வா தோல்வி அடைந்துள்ளார்.

பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலை என அல்லோலப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த மாதம் அந்த நாட்டில், பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளது. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். இதற்கு மத்தியில் புதிய அதிபரை தேர்வு செய்ய அங்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு போட்டியாக எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் களமிறக்கப்பட்டார். இம்ரான்கான் இவருக்கு ஆதரவு அளித்தததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதிபர் தேர்தலில், ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 2-வது முறையாக ஆசிப் அலி சர்தாரி அதிபராக பதவியேற்க உள்ளார். ஆசிப் அலி சர்தாரிக்கு ஆதரவாக 255 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் விழுந்தன. இதன் மூலம் பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க இருக்கிறார்.