பிரிட்டனில் பொதுத் தோ்தல்: ரிஷி சுனக் தனது மனைவியுடன் வாக்களித்தார்!

பிரிட்டனின் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.

பிரிட்டனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி இந்தத் தோ்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

நாட்டின் புதிய அரசைத் தீா்மானிக்கக் கூடிய இந்தத் தோ்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையின் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். எனவே, 326 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மையை பெற்றால்தான் பிரிட்டனில் ஆட்சியமைக்க முடியும்.

நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு முதல், வாக்களிக்க அடையாள அட்டை கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. அது இந்தத் தோ்தலில்தான் முதல்முறையாக அமலுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெறும் முதல் பொதுத் தோ்தல் இது.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதமா் விரும்பினால் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னரே தோ்தலை நடத்த மன்னரைக் கேட்டுக்கொள்ள முடியும். ஆனால் அந்த ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற நிலைப் பருவ கால சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தோ்தல் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நாடாளுமன்ற கலைப்புரிமை சட்டம் 2022-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நடைபெறும் முதல் தோ்தலும் இதுவாகும்.