தமிழக மீனவர்கள் கைதுக்கு முடிவே இல்லையா?: முத்தரசன்

தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

வங்கக் கடலில் மீன் பிடிப்பதற்காக செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் அடைக்கும் அவலமும், படகுகளை பறிமுதல் செய்யும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதும், இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்பதும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப் பட்டினம் பகுதியை சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களின் நான்கு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல கடற் கொள்ளையர்களின் கொள்ளையடிப்பும் தொடர்கின்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் 420 கிலோ எடையுள்ள மீன்பிடிக்கும் வலைகளை அறுத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்தொழித்து வரும் இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களின் கொடூர தாக்குதலுக்கும், கொள்ளையடிப்பிற்கும் முற்றுப் புள்ளி என்பதே கிடையாதா? வாழ்வாதாரத்திற்கு வழியும் பாதுகாப்பும் இல்லையா என்கிற மீனவர்களின் உள்ளக் குமுறலுக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்காதா என்ற கேள்விக்கு விடை தெரிய வேண்டும்.

மேலும், கடற்படை, கொள்ளையர்களின் அடாவடித்தனத்தை தடுக்க ஒன்றிய அரசு உடனடியாக தலையீடு செய்ய வேண்டும். மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்பவும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீன் வளைகளை மீட்டுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.