கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன்: ஜோதிகா

கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன் என்று நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஜோதிகா 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் ‘உடன்பிறப்பு’ படத்தில் நடித்திருந்தார். அக்கா – தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பின் நடிகை ஜோதிகா மீண்டும் பாலிவுட் படமான ‘ஸ்ரீ’ என்ற படத்தில் நடித்து வந்த நிலையில், அந்தப் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட பகுதியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் ஸ்ரீகாந்த் பெல்லா என்கிற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று கதை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஜோதிகா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஸ்ரீ’ படத்துக்கான எனது பகுதிகளை மூடிவிட்டேன். இக்குழுவினரிடமிருந்து கனத்த இதயத்தோடு விடைபெறுகிறேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த துஷார் அவர்களுக்கு நன்றி. இப்படத்தின் நடிகர் ராஜ்குமார் ராவின் தீவிர ரசிகை நான். இப்படக்குழுவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.