பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து ஏஆர் ரஹ்மான் அப்டேட்!

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து ஏஆர் ரஹ்மான் அப்டேட் கொடுத்து அசரடித்துள்ளார். வரும் 29ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் அதேநேரம் பாடல்களும் வெளியிடப்படும் என தரமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவானது. முதல் பாகம் கடந்தாண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் PS 2 படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளான அக நக பாடல் வெளியானது. ஏஆர் ரஹ்மானின் இசையில் மெலடியாக உருவாகியுள்ள அக நக பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் குறித்து அப்டேட் கொடுத்திருந்தனர். ஆனால், இது முதல் பாகத்தின் ட்ரெய்லர் போல பிரம்மாண்டமாக வெளியிடப்படுமா என்பது பற்றி தகவல்கள் வெளியாகாமல் இருந்தன.

இந்நிலையில், தற்போது ஏஆர் ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி அறிவித்துள்ளார். அதன்படி, வரும் 29ம் தேதியன்றே பொன்னியின் செல்வன் 2 பாடல்கள் வெளியாகின்றன. மேலும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். முதல் பாகத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா போன்றே, 2ம் பாகத்திற்கும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 29ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த டுவிட்டர் பதிவில், பொன்னியின் செல்வன் பாடல்கள் ரிக்கார்டிங் செய்யப்பட்ட மேக்கிங் வீடியோவையும் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அதில், சக்தி ஸ்ரீ கோபாலன், ஸ்வேதா மேனன், சின்மயி ஆகியோர் பாடல்கள் பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.