சசிகுமார் இயக்கத்தில் நடிக்கும் லேடி சூப்பர்ஸ்டார்!

இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் நயன்தாரா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை நயன்தாரா அடுத்தடுத்து வெற்றிப்பட நடிகர்களுடன் இணைந்து நடித்துவருபவர். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் மூலம் அவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருந்தார். முதல் படத்திலேயே ஷாருக்கான் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. அட்லீ இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் நயன்தாரா. வாடகைத்தாய் மூலம் உயிர் மற்றும் உலக் என்ற இரு ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். டெஸ்ட் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மண்ணாங்கட்டி, நயன்தாரா 81, தனி ஒருவன் 2 படங்களிலும் நடிக்கவுள்ளார் நயன்தாரா. ஜெயிலர் 2 படத்திலும் இவர் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் நயன்தாரா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் காட்டி வருபவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் படத்தின்மூலம் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இவர் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர். அடுத்தடுத்த படங்களை இயக்கிவந்த சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். கடந்த ஆண்டில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் சசிகுமார், இயக்கத்தையும் கையில் எடுத்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.