படங்களை இயக்குவதே பிடித்திருக்கிறது. நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை: லோகேஷ் கனகராஜ்!

“ஜூன் மாதத்தில் இருந்து ‘ரஜினி171’ படப்பிடிப்பு தொடங்கும். இப்படம் முடித்து அடுத்ததாக ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளேன்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் இசையமைத்து, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடித்துள்ள ஆல்பம் பாடல் ‘இனிமேல்’. இப்பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இந்த ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:-

எனக்கு பொதுவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. என்னிடம் அவர்கள் கதை சொன்ன விதம், கமல்ஹாசனின் பாடல் இதெல்லாம் சேர்ந்து சரி நடிக்கலாம் என தோன்றியது. இதை நான் பெரிய நடிப்பாகவே கருதவில்லை. ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து எது வந்தாலும் நான் மறுக்கமாட்டேன். அதுதான் முக்கியமான காரணம். அந்த ஆல்பம் பாடலுக்குப் பிறகு கேமராவுக்கு முன்னாள் நிற்கும் பயம் குறைந்துவிட்டது. அதற்கு காரணம் ஸ்ருதிஹாசன்.

படங்களை இயக்குவதே பிடித்திருக்கிறது. நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை. 3 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். அதனை முதலில் எடுத்து முடிக்க வேண்டும். ‘ரஜினி 171’ படம் ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும். இப்படம் முடித்து ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆல்பம் பாடல் ‘இனிமேல்’ காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான காதல், அவர்களிடையே இணக்கமான ரொமான்ஸ், அதன்பின் வரும் சண்டை, பிரிவு, மீண்டும் இணைதல் என்ற ஃபார்முலாவில் இப்பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடல் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் லோகஷ் கனகராஜ். ஆனால், அவருக்கும் ரொமான்ஸுக்கும் ஒரு காத தூரம் இடைவேளி இருப்பது போல தெரிகிறது. காரணம், ஸ்ருதிஹாசனுடனான அவரது காட்சிகளில் மென்மையைத் தாண்டிய ஒரு ரக்கட் தனம் இருக்கத்தான் செய்கிறது. மேலும், உணர்ச்சிகளின் போதாமையும் முகத்தில் பளிச்சிடுகிறது. ஆங்கிலம் கலந்த பாடல் வரிகள் பெரிய அளவில் தாக்கமில்லாமல் கடக்கிறது.