பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை: திரிஷா

‘கட்டா மீட்டா’ தான் நான் நடித்த முதலும் கடைசியுமான பாலிவுட் படம் என்று திரிஷா கூறினார்.

நாற்பது வயதிலும் ஸ்டார் ஹீரோயினாக வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார் திரிஷா. தமிழ், தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார். திரிஷா இந்தியில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்.

ஒரே படத்துடன் எதற்காக நிறுத்திக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்து திரிஷா கூறும்போது, “2010-ல் அக்சய் குமார் ஹீரோவாக நடித்த ‘கட்டா மீட்டா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசான இந்த படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை.

இதுதான் நான் நடித்த முதலும் கடைசியுமான பாலிவுட் படம். இந்தப் படம் தோல்வி அடைந்ததனால் பாலிவுட்டிலிருந்து நான் விலகி விட்டேன் என்று செய்திகள் வந்தன. ஆனால் மும்பைக்கு நான் என் இருப்பிடத்தை மாற்ற தயாராக இல்லை. அங்கே செல்ல வேண்டும் என்றால் சவுத்தில் நிறையவற்றை விட்டு விடவேண்டும். பாலிவுட்டுக்கு சென்று எனது கெரியரை புதிதாக மீண்டும் ஆரம்பிக்கும் அளவிற்கு ஆர்வம் அப்போது எனக்கு இல்லை. இதனால்தான் இந்திப் படங்களில் நடிக்கவில்லை” என்றார்.