ஷில்பா ஷெட்டி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!

பண மோசடி விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான வீடு உள்பட அவரது கணவர் ராஜ் குந்த்ராவின் 98 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியிருக்கிறது பெரும் பரபரப்பை பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான 97.79 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிட் காயின் மூலமாக பெரும் பண மோசடியில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டு இருப்பது தெரிய வந்த நிலையில், இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

எம்/எஸ் வேரியபிள் டெக் நிறுவனம் மக்களிடையே பெரும் எம்எல்எம் மோசடியை நிகழ்த்தி வருவதாக ஏகப்பட்ட புகார்கள் மும்பை போலீஸாருக்கு குவிந்த நிலையில், இதில் கவனம் செலுத்திய அமலாக்கத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், அந்த நிறுவனத்தை நடத்தி வந்த அமீத் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ் மற்றும் மகேந்திரா பரத்வாஜ் உள்ளிட்டோர் கடந்த 2017ம் ஆண்டு பிட் காயின் மூலமாக மோசடி செய்து 6600 கோடியை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அதில், 150 கோடி ரூபாயை ராஜ் குந்த்ரா மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். இதில், நடிகை ஷில்பா ஷெட்டியின் ஜூஹூ பங்களாவையும் அமலாக்கத்துறையினர் கையகப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.