இந்திய நாடு என் வீடு.. இந்தியன் என்பது என் பேரு: வடிவேலு!

சென்னையில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு ‘இந்திய நாடு என் வீடு; இந்தியன் என்பது என் பேரு’ என ‘குறியீடு’ பாடல் பாடி, “இந்தியா என்பது மட்டும்தான் நாம்” என்று பேசினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெயில் அதிகமாக உள்ளதால் வாக்குப்பதிவு மந்தமாக இருப்பதாக தெரிகிறது. குளிரான தண்ணீரே சூடாகிவிடுகிறது. இனிமேல் தான் மக்கள் வாக்களிக்க வருவார்கள். மக்கள் இப்போது மிகத் தெளிவாக இருக்கிறார்கள். முந்தைய தேர்தலைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் யாருக்க வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கிறார்கள். அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றதால் இந்த முறை பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை” என்றார்.

தொடர்ந்து ‘டிஜிட்டல் இந்தியா’ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, “டிஜிட்டல் என்றாலே என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியா தெரியும். அது குறித்து ஒரு பாடலைப் பாடலாம். ‘இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு. எல்லார் மதமும் ஓர் மதமே, எல்லோர் மொழியும் ஒரு பேச்சு’. இந்தியா என்பது மட்டும் தான் நாம். வேறு மாதிரி எடுத்து போட்டு கலவரத்தை உண்டாக்கிவிட்டு போங்கள்” என தன்னுடைய வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசிவிட்டுச் சென்றார்.