உமாதேவி அவர்களின் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி: கனிமொழி

வழமைகளை உடைக்கும் உமாதேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று கனிமொழி கூறியுள்ளார்.

கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில் பல புதிய இயக்குநர்களை வெற்றிமாறன் அறிமுகம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஜெய்சர் ஆனந்த் என்ற அறிமுக இயக்குநரின் திரைப்படத்தை வெற்றி மாறன் தயாரிக்கிறார். ஆண்ட்ரியா நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘அனல் மேலே பனித்துளி’ என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக், அறிவு, உமாதேவி ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். வெற்றி மாறனின் விருப்பமான ஒளிப்பதிவாளரான ஆர்.வேல்ராஜ் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படத்தில் உமாதேவி எழுதிய 3வது பாடலின் ப்ரோமோவை திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி அவர்கள் நேற்று வெளியிட்டார். தனது டுவிட்டர் பக்கத்தில், “பெண்ணை, உடலாக, காட்சிப்பொருளாக , பாரம்பரியப் பெருமையாக, சொத்தாக, வன்முறைகளின் இலக்காக, உயிரற்ற புனிதமாகப் பார்க்கும் இந்த சமூகத்தை, வழமையான எண்ணங்களை, கேள்வி கேட்கும், உடைக்க நினைக்கும் தமிழ் திரைப் பாடல்கள் மிக அரிது. அப்படி வழமைகளை உடைக்கும் உமாதேவி அவர்களின் இந்தப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.