நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் பார்த்திபனும் ஒருவர்: மும்தாஜ்!

நடிகை மும்தாஜ் 23 வருடங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது கஷ்டத்திற்காக கொடுத்த கடனை திருப்பி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘மோனிஷா என் மோனலிசா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். தொடர்ந்து, மலபார் போலீஸ், குஷி, சாக்லேட் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.

இந்நிலையில், நடிகை மும்தாஜ் 23 வருடங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது கஷ்டத்திற்காக கொடுத்த கடனை திருப்பி கொடுத்துள்ளார். மும்தாஜ் மேலும், “நான் பிரபலமாக இல்லாத போது சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி. பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவோ நல்லதாக இருந்தாலும், அதை செய்வதில் தவறிழைத்து, காலப்போக்கில் மறந்துவிட்டேன். பார்த்திபன் சார், இந்த சினிமாத் துறையில் நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தந்தருள்வானாக” என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது இணையப் பக்கத்தில், “கற்றது: பிரதிபலன் நோக்காமல் இயன்றதை செய்தல் மற்றது:செய்த உதவியை நோகாமல் மறந்துவிடல். திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் ‘நாளை’ என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்தால் யாவும் ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார். மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை, தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்! தினமும் ஒரு நல்லது செய்ய முயற்சிக்கிறேன். இன்றும் செய்தேன். அதையெல்லாம் நான் சொல்வதில்லை. அவையாவும் அகத்தின் வாக்கம் கிளீனர். பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல அப்படியிருக்க இதில்… நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே!” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.