முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்: நடிகர் சூரி!

முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாக எடுக்க வேண்டும் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் முதல்வர் ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி கடந்த 19ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் புகைப்படக் கண்காட்சி 27ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். அவர்களை வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி வரவேற்றார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் அவரது சிறுவயது படங்கள் முதல் தற்போது முதல்வராக பொறுப்பேற்று தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் வரையிலான பல்வேறு காலகட்ட புகைப்படங்களை நடிகர் சூரி பொறுமையாக பார்வையிட்டார். தொடர்ந்து மிசா காலகட்டத்தில் சிறையில் ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை காட்சிப்படுத்தும் அரங்கை உணர்ச்சிப்பூர்வமாக பார்வையிட்டார். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட சூரி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, மிகப்பெரிய அரசியல் பயணத்தில் முதல்வர் கடந்து வந்த பாதையை பதிவு செய்துள்ளனர். நாம் 14 வயதில் கண்மாயில் ஓடியாடி விளையாடி இருப்போம். ஆனால் 14, 15 வயதில் ஸ்டாலின் என்ற மாணவர் கட்சிக்காக பிரச்சாரம் செய்து, 15 வயதில் இளைஞர் திமுக என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, 20 வயதில் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து அதற்குப் பின்பு அரசியல் பயணத்தில் எதிர்பாராத பல இன்னல்களை கடந்து வந்துள்ளார். மிசாவில் அவரை சிறையில் அடைத்தபின் அவ்வளவு இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார். அதன்பின்பு சினிமா துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அரசியலில் நிரூபித்து தயாரிப்பாளராக, நடிகராக தன்னை நிரூபித்துக் காட்டி அதன் பின்பு அரசியல் பயணத்தில் தொண்டர்களுடன் தொண்டராக, கடைக்கோடி தொண்டனாக இருந்து பயணித்துள்ளார். 36 வயதில் சட்டமன்ற உறுப்பினராகி 43 வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயரராகி மிகப்பெரிய பதவிகளை வகித்துள்ளார்.

மேயராக வந்த பின்பு சிங்காரச் சென்னை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி சென்னையில் பல பூங்காக்களை உருவாக்கி, பல மேம்பாலங்களைக் கட்டிம் தூய்மை பணியாளர்களின் கஷ்டத்தை பார்த்து அவர்களுக்கு நவீன வசதிகளை உருவாக்கி கருணாநிதியின் ஆசியுடன் மக்களுக்கு செய்யக்கூடிய பணிகளை எந்த விதத்திலும் துவளாமல் செய்து வருகிறார். சென்னையில் வெள்ளம் வந்தபோதும் அவ்வளவு உழைத்தார். கொரோனாவின் போது கடவுளாக வந்து கொரானா பாதுகாப்பு கவச உடையை அணிந்து மருத்துவமனைக்கே சென்றார். மருத்துவமனைக்குள் செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியும் கூட, அதை மீறி மருத்துவமனைக்குள் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்லி வந்தார். கருணாநிதி பக்கத்தில் இருந்து கொண்டு கடைசி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அப்பா என்று ஒருமுறை அழைக்கட்டுமா என்று கேட்ட அந்தப் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த புகைப்பட கண்காட்சியின் ஒவ்வொரு போட்டோவையும் பார்க்கும்போது சில போட்டோக்கள் சிரிக்க வைக்கிறது, சில அழ வைக்கிறது. சில போட்டோக்கள் பிரமிக்க வைக்கிறது. தமிழ்நாட்டு மக்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு உரிய இடத்தை கொடுத்து அழகு பார்த்து வருகிறார்கள். அமைச்சர்கள் முதல்வருக்கு தூண்கள் போல இருந்து செயல்படுகின்றனர். இது சாதாரண விஷயம் கிடையாது. கருணாநிதியின் மகன் எனக்கூறி பதவியை தக்க வைத்து முதல்வராக உட்காரவில்லை. கடைக்கோடி தொண்டனாக கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 14 வயதில் இருந்து உழைத்து உழைத்து இந்த இடத்தில் முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின். கண்டிப்பாக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாக எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.