உதயநிதி ஸ்டாலின் என்னை பிரசாரத்திற்கு அழைக்கவில்லை: நடிகர் சூரி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் என்னை பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் சூரி பங்கேற்றார். அப்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

எனது அடுத்த படமான விடுதலை-2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அந்த படம் விரைவில் வெளியாகும். அதற்கு முன்பாக கருடன் படம் வெளியாகிறது. அந்த படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டன. விடுதலை சினிமாவை போல, கருடனும் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

இந்த தேர்தல் மக்களுக்கு நல்லதாக அமைய வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் என்னை பிரசாரத்திற்கு அழைக்கவில்லை. நான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். அவருக்கு எப்போதும் எனது வாழ்த்துக்கள் இருக்கும்.

தேர்தல் என்பது மிக முக்கியமானது. இத்தேர்தலில் கன்னிச்சாமிகள் போல கன்னி வாக்குகளை செலுத்த முதல்முறை வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு ஓட்டும், சாதாரண ஓட்டு அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டு. எனவே அதனை நன்றாக கணித்து முறையாக செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.