ஹீரோ வாங்கும் சம்பளத்தை15 படங்களில் நடித்தால்தான் சம்பாதிக்க முடியும்: ரவீனா தாண்டன்!

ஹீரோ ஒரு படத்தில் சம்பாதித்ததை நாங்கள் 15 படங்களில் நடித்தால்தான் சம்பாதிக்க முடியும் என்று நடிகை ரவீனா தாண்டன் கூறினார்.

தமிழில் ‘சாது’, ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகையான ரவீனா தாண்டன் நடிகர்களை விட, நடிகைகளுக்கு சம்பளம் பல மடங்கு குறைவாக வழங்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்து உள்ளார். இது குறித்து ரவீனா தாண்டன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

நான் கதாநாயகியாக நடித்த காலத்தில் கதாநாயகன், நாயகிகளுக்கு வழங்கும் சம்பளம் விஷயத்தில் இயக்குனர், தயாரிப்பாளர்கள் நிறைய பாகுபாடு காட்டினர். ஹீரோ ஒரு படத்தில் சம்பாதித்ததை நாங்கள் 15 படங்களில் நடித்தால்தான் சம்பாதிக்க முடியும். அனைத்து ஹீரோக்களை பற்றி நான் சொல்லவில்லை. ஆனாலும் பல நடிகர்கள் அதிமாகவே சம்பளம் பெற்றனர்.

நடிகைகள் வந்த படங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நடித்தனர். சினிமா வாழ்கையில் ஒரு திட்டமிடல் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நடிகைகள் மிகவும் திட்டமிட்டு முன்னேறுகிறார்கள். கதைகள் தேர்வில் மட்டுமன்றி சம்பள விஷயத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.