தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கிய போப்!

வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதன்மூலம் புனிதர் பட்டம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை தேவசகாயம் பிள்ளை பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற கிராமத்தில் 1712 ம் ஆண்டு பிறந்தவர் நீலகண்டபிள்ளை. இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றி வந்தார். அப்போது குளச்சல் போரில் டச்சு படை தளபதி டிலனாய் கைது செய்யப்பட்டார். பின்னர் திருவிதாங்கூர் அரசின் தளபதியாக போர் பயிற்சியாளராக பணியாற்றினார். இவர் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் உள்ள அரண்மனையில் வீரர்களுக்கு போர் பயிற்சி, ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அங்கு பணியாற்றிய நீலகண்டபிள்ளைக்கும், டிலனாய்க்கும் இடையே நெருங்கிய பழக வாய்ப்பு கிடைத்தது. இயேசு கிறிஸ்துவின் வரலாறுகளை டிலனாயிடம் இருந்து கேட்டு தெரிந்த நீலகண்டபிள்ளை மனம் கவரப்பட்டார்.

இதை தொடர்ந்து, அன்றைய பாண்டிய நாட்டின் இடமான நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் இருந்த தேவாலயத்தில் திருமுழுக்குப் பெற்று தேவசகாயம் பிள்ளை என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். மதம் மாறியதால் அவர் பணியாற்றி வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு அவரின் பணிகள் பறிக்கப்பட்டது. சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் .

பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அவர், அதை பொருட்படுத்தாமல் இறைப் பணியை முன்னிலை படுத்தியதால் அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலைதட்டு பகுதியில் சிறைவைக்கப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அதன் மூலம் மறைசாட்சியானர். அவருடைய உடலை மூன்று நாட்களுக்குப் பின்னர் எடுத்து வந்து நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு புனிதர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபை அவருக்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலய சதுக்கத்தில் வைத்து புனிதர் பட்டம் கொடுக்க ஒப்புக்கொண்டது. அதன்படி இன்று மதியம் 1.30 மணிக்கு மறைச்சாட்சி தேவசகாயத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதன்மூலம் தமிழகத்தில் புனிதர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். இதன்மூலம் உலகளவில் தமிழகம் கவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிற நாடுகளை சேர்ந்த 9 பேருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.