வட கொரியாவில் 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு கொரோனா!

சர்வாதிகாரி கிம் ஜாங் உன் அதிபராக உள்ள வடகொரியா சமீபத்தில் தான் தங்கள் நாட்டின் முதல் கோவிட் தொற்று பாதிப்பை அறிவித்தது. இந்நிலையில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3.2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வடகொரியாவில் கோவிட்டின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் சத்தமின்றி காணப்பட்டது. என்ன நிலவரம் என்பதே வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது அந்நாட்டின் அரசு ஊடகமே முதல் ஒமைக்ரான் தொற்றை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. அதிபர் கிம் ஜாங் உன், ஒமைக்ரான் பரவல் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறி ஊரடங்கு பிறப்பித்துள்ளார். தலைநகர் பியாங்யாங் உட்பட பல நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.

வட கொரியாவின் சுகாதார அமைப்பு உலகின் மிக மோசமான ஒன்று என கூறுவர். மேலும் கோவிட் தடுப்பூசிகள் இங்கு பயன்பாட்டில் இல்லை. பெரியளவில் சோதனை செய்யும் திறன் கிடையாது. தற்போது தான் சீனா மற்றும் அண்டை நாடான தென் கொரியாவின் தடுப்பூசி உதவிகளை பெறுகின்றது. இதற்கிடையே மக்களை கோவிட் பாதிப்பு பிரச்னையிலிருந்து திசைத் திருப்ப கிம் அணு குண்டு சோதனையை விரைவுப்படுத்தக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நாட்டின் கோவிட் நிலவரம் குறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:-

நாட்டின் அனைத்து மாகாணங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் முற்றிலுமாக ஊரடங்கில் உள்ளன. அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் குடியிருப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் தடுக்கப்பட்டுள்ளன. நோய் பரவுவதை தடுக்க அவசரகால அதிகபட்ச தனிமைப்படுத்தல் அமைப்பை செயல்படுத்தியுள்ளோம். ஞாயிறன்று காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கூறியுள்ளது.