மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது!

மத்திய – மாநில அரசுகளின் நல்லுறவை பேணும், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள் மற்றும் ஆறு மத்திய அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்க்காரியா கமிஷன் பரிந்துரையை அடுத்து, 1990 முதல், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைக்கப்பட்டது. இது, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே எழும் பிரச்னைகளை விவாதித்து தீர்வு காணும். பிரதமர் தலைமையிலான இந்த குழு தற்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மத்திய – மாநில அரசுகளின் நல்லுறவை பேணும், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவராக இருப்பார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் உறுப்பினர்களாக இருப்பர். இவர்களைத் தவிர, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், ஹர்தீப் சிங் புரி, நிதின் கட்கரி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மேலும் 10 மத்திய அமைச்சர்கள் நிரந்தர அழைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு
உள்ளனர்.

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் நிலைக்குழுவும் மறுசீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், வீரேந்திர குமார் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஆந்திரா, அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச முதல்வர்களும் நிலைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.