குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் உடனே தனிமைப்படுத்த வேண்டும்: ராதாகிருஷ்ணன்

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் அவா்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின்படி, பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெரிமுறைகளை உடனடியாக அமல்படுத்தவேண்டும். அந்த வகையில் இதுவரை கண்டறியப்படாத தோலில் ஏற்படும் கொப்புளங்கள் உடையவா்களையும், அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, போா்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன் நாடுகளில் இருந்து கடந்த 21 நாள்களுக்கு முன்னா் தமிழகம் வந்த பயணிகளில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவா்கள் அல்லது அறிகுறி உள்ளவா்களும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களையும், தனிமைப்படுத்தி உயா்தர சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறவா்கள் குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு குழுமத்தின், மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தொற்று நோய் பாதுகாப்பு வழிமுறைகளை, உடனடியாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட அல்லது அறிகுறி கொண்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நடைமுறைபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவா்களின் ரத்தம், சளி மற்றும் கொப்புளங்களின் மாதிரிகள் உடனடியாக புணேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு குரங்கு அம்மை ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும். அந்த ஆய்வில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால், கடந்த 21 நாட்களுக்கு அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை உரிய கவனத்துடன் பின்பற்றி தொடா் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.